செங்கல்பட்டு: ஆம்புலன்ஸில் திடீர் தீ விபத்து- புகை மூட்டமாக மாறிய அரசு மருத்துவமனை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் இருந்து வாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனாத் தொற்று பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி ஒருவரை, 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, எக்ஸ்ரே எடுப்பதற்காக அவசரப் பிரிவுக்கு அழைத்து சென்றது. வாகனத்தில் இருந்து மூதாட்டியை இறக்கி கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றபோது, வாகனத்தில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆம்புலன்ஸ் முழுவதும் தீ பரவியதால் வாகனம் முழுவதும் சேதமானது. எதிர்பாராதவிதமாக நடந்த தீ விபத்தால், மருத்துவமனை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.