திமுக பிரமுகர், பைனான்சியர், சினிமா பட தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

திமுக பிரமுகர், பைனான்சியர், சினிமா பட தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
திமுக பிரமுகர், பைனான்சியர், சினிமா பட தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் தி.மு.க பிரமுகர், பைனான்சியர், சினிமா பட தயாரிப்பாளர் ஆகியோரை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ஏ.வி. சாரதி என்பவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்காடு-திமுக பிரமுகர்:

ஏ.வி.சாரதி அ.தி.மு.க.வில் வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஆற்காடு பகுதியில் சிமெண்ட் ஏஜென்சி, கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோடிக்கணக்கிலான வரி ஏய்ப்பு செய்ததாக புகார்களின் அடிப்படையில், ஏ.வி.சாரதிக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் ரீதியாக ஏ.வி சாரதிக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை புரசைவாக்கம் - பைனான்சியர் அலுவலகம்:

குறிப்பாக சென்னை புரசைவாக்கம் சுப்பையா தெருவில் உள்ள கார், இரு சக்கர வாகனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் பைனான்சியர் சுரேஷ் லால்வானி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏ.வி. சாரதியின் பள்ளிக்கரணையில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சுரேஷ் லால்வானி பைனான்ஸ் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதை போல வேப்பேரியில் ஜெர்மையா சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம், ஆலந்தூரில் உள்ள  Bherudan dugar financial லிமிடெட் என்ற பைனான்சியர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆலந்தூர்- மினரல்ஸ் நிறுவனம்:

இதே போல சென்னை ஆலந்தூர் VGP Murphy Square என்ற பகுதியில் தாது மணல் நிறுவனமான டி.ஜே. மினரல்ஸ் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. தாது மணல் தவிர குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சென்னை  பள்ளிக்கரணை வடக்குப் புதுப்பட்டு ரவி பிரதான சாலையில் உள்ள கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் எருமையூர் பகுதியில் உள்ள தனியார் குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை தி.நகர்-திரைப்பட தயாரிப்பாளர்:

அதேபோல சென்னை தி.நகர்  ராஜா தெருவில் உள்ள பிரபல குவாரி உரிமையாளரும், முப்பொழுதும் உன் கற்பனைகள், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளருமான எல்ரெட் குமார் அலுவலகத்திலும், அவர் பங்குதாரராக உள்ள ஆர்.எஸ் என்ஃபோடைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது. பள்ளிக்கரணையில் சோதனை நடைபெறும் வீட்டின் உரிமையாளர் கந்தசாமி பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஏ.வி சாரதிக்கு சொந்தமான இடங்களில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி விரிவடைந்து பைனான்சியர்கள், சினிமா தயாரிப்பாளருக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்படியான வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை சார்பில் முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தாலும், எவ்வளவு தொகை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது? இவ்விவகாரத்தில் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்கள் சோதனைக்கு பின் வருமான வரித்துறை மூலம் வெளியிடப்படும் அறிக்கையின் மூலமே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com