பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்

பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்
பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்

தமிழ்நாட்டில், பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் முக்கியத் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாவே, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அண்மையில் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அப்பாடப்புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழக அரசு நீக்கியுள்ளது.

அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும் சாதி அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளன. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் பெயரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது. அதே போல தமிழில் வெளியான முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் மாயூரம் வேதநாயகம் என்று மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு, எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது திராவிட கழக நூற்றாண்டு விழாவையொட்டி, தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதி பெயர்கள் நீக்கப்பட்டன.

மேலும் 1997ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இனக் கலவரத்தையடுத்து, மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களையும் நீக்கியும் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com