சமூகநீதி போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக ரூ. 4 கோடியில் மணிமண்டபம் - ஸ்டாலின்

சமூகநீதி போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக ரூ. 4 கோடியில் மணிமண்டபம் - ஸ்டாலின்
சமூகநீதி போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக ரூ. 4 கோடியில் மணிமண்டபம் - ஸ்டாலின்

கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின் நினைவாக, விழுப்புரத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் முக.ஸ்டாலின் பேசினார். அப்போது, "சமூகநீதி கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு, சாதி ரீதியிலான ஒதுக்கீடு என்று எந்த பெயரைச் சொல்லி அழைத்தாலும் அது சமூகநீதி என்ற ஒற்றைச் சொல்லை குறிக்கும் பொருளை வேற எந்த சொல்லும் தருவது கிடையாது.
அத்தகைய சமூகநீதி கொள்கைதான் திராவிட இயக்கம். இந்த தமிழ் சமுதாயத்திற்கு கொடுத்த மாபெரும் கொடையாகும் அது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே இந்த சமத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது.

வகுப்புரிமை எனும் இடஒதுக்கீட்டு முறையை 100 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு கொண்டு வந்தது நீதிகட்சி. மூடப்பட்டுக்கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகார பதவிகள் அனைத்தையும் அனைவருக்கும் ஆக்கியது. சுதந்திர இந்தியாவில் அதற்கு சட்டரீதியான இடர்பாடு வந்தபோது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைகுழல் துப்பாக்கியாக இருந்து முன்னெடுத்த போராட்டம்தான் அது.

இந்திய துணை கண்டத்தையே அது கவனிக்க வைத்தது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், அதனை அன்றைய பிரதமராக இருந்த நேருவிடத்திலே வலியுறுத்தியதன் காரணமாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கைக்கு இந்திய அரசின் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அப்படி சமூகநீதி அடைய பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்றுத்தந்ததும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக வரலாற்றிலே இருக்கின்ற அந்த சரித்திர சான்று மறைக்க முடியாத சாசனமாக அமைந்துள்ளது. சமூகநீதிக்காக நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த போராட்டத்தை அன்றை அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிசூட்டுக்கு 21 பேர் பலியாயினர். சமூகநீதி போராளிகளான அவர்களின் உயிர் தியாகத்திற்கும் போராட்டதிற்கும் நியாயம் வழங்கிடும் வகையில் 1989ஆம் ஆண்டு அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன் முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

சமூகநீதி கொள்கையின் தொடர்ச்சியாக கலைஞர் வழியில் செயல்படும் நம்முடைய அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நடைமுறை படுத்தியிருக்கிறோம். ஒதுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும் அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும் என்பதே திமுக அரசின் உயர்ந்த நோக்கமாகும்.1987ஆம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டுக்கு பலியான 21 தியாகிகளின் நினைவாக ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன். மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடம் உண்டு. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால் பின்தங்கிய வகுப்பினருக்காக எனது உயிரையே பணயம்வைத்து போராடுவேன், என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலே அன்றை முதல்வராக இருந்த கலைஞர் சொன்ன வார்த்தைகள் அது. அந்த உறுதிமொழியை நானும் ஏற்றுக் கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com