பிரதமராக 2வது முறை பதவியேற்ற பிறகு, முதன்முறையாக மோடி சென்னை வந்தார். விமானம் மூலம் வந்த பிரதமரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, தமிழக பாரதிய ஜனதா சார்பில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வணக்கம் என்று தமிழில் கூறிய மோடி, சென்னை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் தமிழிலேயே கூறினார். மேலும், உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி என கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஆயுதப்படை காவலர்களான மகேஷ்வரன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் பணி காரணமாக கூடங்குளம் செல்வதற்கு பயணித்தனர். அப்போது பேருந்தின் நடத்துனர் ரமேஷ் இருவரிடமும் வாரண்ட் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஒரு காவலர் நடத்துனரை தாக்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற வாகனம் சாலையில் வெடித்து சிதறியதில் ஓட்டுநர், கிளீனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தின் அருகே இருந்த வீடுகள் மற்றும் கடைகளும் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி துணை கண்காணிப்பாளர் நீதிராஜ் உள்ளிட்ட காவல்துறையினர், வாகனத்தில் பேப்பர் பட்டாசுகள் இருந்ததாக தெரிவித்ததோடு, விசாரணையிலும் ஈடுபட்டனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இடைத்தேர்தல் நடத்தப்படும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மனுத்தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தனது வேட்புமனுவை வட்டாட்சியர் சந்திரசேகரனிடம் அளித்தார்.
எல்லையில் இனி கண்ணாமூச்சி ஆட்டம் என்பதே கிடையாது என்றும், தேவைப்பட்டால் எல்லை கடந்து தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 603 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை இறங்கி 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசு விலை குறைந்து 48 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது.