ஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி - 3 பேர் கைது
சென்னை அருகே சினிமா பாணியில் ஆள்மாறாட்டம் செய்து, ரூ.50 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை
காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருநின்றவூர் பிரகாஷ் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மோகன்
என்பவரிடம் நிலம் வாங்கச் சென்றுள்ளார். அப்போது மோகன், பிரகாஷ் நகர் 7ஆவது தெருவில் உள்ள ஒரு கிரவுண்ட் இடத்தை
ராஜேந்திரனுக்கு காட்டி, அந்த இடம் கோவையை சேர்ந்த லோகிதாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார். இடத்தின் மதிப்பு
ரூ.52 லட்சம் என்று விலை பேசியதாக தெரிகிறது. ராஜேந்திரன் 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டு
முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் லோகிதாஸையும் மோகன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நிலத்தை வாங்கிய ராஜேந்திரன், வீடு கட்டுவதற்காக இடத்தை சுத்தம் செய்த போது அங்கு வந்த ஒருவர் இடம்
தன்னுடையது என்றும், தான் லோகிதாஸ் என்றும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் காவல் நிலையத்தில்
புகார் அளித்தார். விசாரணையில் வளசரவாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் லோகிதாஸ் போல் ஆள்மாறாட்டம் செய்து, கோவையில்
வசிப்பது போல் ரேஷன் கார்ட், ஆதார் கார்ட், பான் கார்ட், வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை தயாரித்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் போலி பத்திரம் தயாரித்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் லோகிதாஸாக
ஆள் மாறாட்டம் செய்த ரவி, அவரது மனைவி தேவி பிரியா, அவரது கூட்டாளி ஹரி ஆகிய மூவரை கைது செய்தனர். முக்கிய
குற்றவாளிகளான மோகன், சங்கர் என்கின்ற ராமசுப்ரமணியம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.