\
இரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

இரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

இரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாயும் சந்தனவர்த்தினி ஆறு, குடகனாறு ஆகியவற்றில் மணல் கொள்ளை நடப்பதாக கூறப்பட்டது. அங்கு மாஃபியா கும்பல் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இரவு பகல் பாராமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுதொடர்பா‌க புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஹெலிகாம் காட்சிகளில் தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர், எரியோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் அள்ளப்பட்டிருப்பது தெரிகிறது. ஆற்றுப் பகுதிகள் மட்டுமல்லாமல் தனிநபர் பட்டா நிலங்களிலும் மணல் அள்ளப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து எந்த அச்சமும் இன்றி மணல் கொள்ளை எவ்வித தங்கு தடையுமின்றி நடைபெற்று வருகிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள். இதனைக் கனிமவளத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் புகார் செய்பவர்களை மணல் மாஃபியா, அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறும் மக்கள், புகார் தெரிவிக்கவே அச்சமாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஏற்கெனவே வறட்சி மிகுந்த தங்கள் மாவட்டத்தை, மணல் மாஃபியா கும்பலிடம் இருந்து காப்பாற்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com