ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு விரைவில் மாற்றப்படும் என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதியளித்துள்ளதாக மாணவியின் தந்தை கூறியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா கடந்த 8-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஃபாத்திமாவின் தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம் எனப் புகார் எழுந்தது. தமது செல்போனில் தற்கொலைக்கான காரணத்தை ஃபாத்திமா பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
அவரைத் தற்கொலை செய்துகொள்ள தூண்டியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் டெல்லி சென்ற அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்ததாகக் கூறினார். மேலும் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தும் என இருவரும் உறுதியளித்ததாக தெரிவித்தார்.