“பைனரி தியரியும், பைரவி ராகமும் ஒன்றுதான்” - இளையராஜா ஆராய்ச்சி மைய விழாவில் ஐஐடி இயக்குநர் பேச்சு!

ஐஐடி மெட்ராஸில் இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆய்வு மையம் அமைய உள்ளது.
இளையராஜா
இளையராஜாபுதிய தலைமுறை

ஐஐடி மெட்ராஸில் இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆய்வு மையம் அமைய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்கல்வி நிலயத்திற்கும், இளையராஜா தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான நிலையில், மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைப்பெற்றது.

இதில் இளையராஜா பங்கேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் ஐஐடி இயக்குனர் காமகோடியும், இளையராஜாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். பிறகு இளையராஜாவும், ஐஐடி இயக்குனர் காமகோடியுடன் பிரத்தியேக கலந்துரையாடினர்.

இளையராஜா
சூரிய புயல் தாக்கத்தால் பூமியில் இவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டதா! மூத்த விஞ்ஞானி கொடுத்த அசத்தல் தகவல்!

இதில் பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, “பைனரி தியரியும், பைரவி ராகம் இரண்டும் ஒன்று தான் . கலைஞர்களுக்கு தொழில் நுட்பமும் பொறியியலும் சொல்லிக் கொடுத்தால் புதிய கண்டுபிடிப்புகள் மேம்படும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. ஆர்ட் ஆஃப் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங், ஆர்ட் ஆஃப் ஹார்டுவேர் என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு அளவிற்கு மேல் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் சேர்ந்தால் அது கலைதான். பொறியியலையும் விளையாட்டையும் எப்படி சேர்த்தோம். அது போல பொறியியலையும் இசையையும் சேர்ப்பது தான் எங்கள் நோக்கம்..." என்றார்.

மேலும் பேசுகையில், "அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் என்பது தான் எங்களது கொள்கை. ஹம்சவர்தினி ராகம் ரீதி கெளலா உள்ளிட்ட ராகம் இசைப்பது கடினம். அதை மெருகேற்றி சாதாரண மனிதனும் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்ந்தவர் தான் இளையராஜா. சங்கீதம் பற்றி தெரியாதவர்களும் ரசிக்கும் விதத்தில் உருவாக்கியதுதான் இளையராஜாவின் தனித்துவம். முறையான இசை பயிற்சி எனக்கு கிடையாது என இளையராஜா கூறுகிறார். ஆனால் தெய்வீக அருளால் அவருக்கு இசைஞானம் கிடைத்துள்ளது. எவ்வாறு இசையமைக்க வேண்டும், இசை கோர்ப்புகளை உருவாக்குவது, அதிர்வுகளை அளவிடுவது என நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ள உள்ளோம். சவுண்ட் எஞ்சினியரிங் மிகப்பெரிய துறையாக வளர்ந்து வருகிறது. புதிய இசைக்கருவிகளை உருவாக்க வேண்டும். அதோடு வீணை, தம்புரா போன்றவை நமது ஊரிலிருந்து உருவாக்கப்பட்டது. அவற்றை எவ்வாறு மெருகேற்றுவது என்று ஆராய்ச்சிகள் நடைபெறும்.

இளையராஜா மையத்திற்காக மூங்கில் வடிவத்தில் இசை மையம் உருவாக்க உள்ளோம். வருடம் முழுவதும் இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இசையினால் மழை வந்துள்ளது, இயற்கையை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சங்கீதத்தினால் மனித குலத்திற்கு என்ன நன்மை கிடைக்கிறது என்கிற ஆராய்ச்சி நடைபெறும். உலகத்தில் உள்ள எல்லா சங்கீதத்தை விட இந்திய இசைக்கு தனித்துவம் உள்ளது. கிராமிய இசை தெய்வீக இசை பாரம்பரிய இசை நிறைய பாணிகள் உள்ளது.

புதிய படிப்புகள் தொடங்கப்படும். தனித்துவமான ஆராய்ச்சிகள் மூலம் தொழில் உருவாக்கம் நடைபெறும், இசை தொழில்நுட்பம் தொடர்பாக புற்று தொழில் நிறுவனங்கள் உருவாக்குவதற்கு ஊக்குவிக்கப்படும்.

1975 இல் இருந்து இளையராஜாவின் ரசிகராக இருந்து வருகிறேன். இளையராஜாவை என்னால் பார்க்க முடியுமா என ஏங்கி இருக்கிறேன். ஆராய்ச்சி பள்ளி ஆரம்பிக்கப் போகிறோம் என சொன்னவுடன் குழந்தை போல் எழுந்து உட்கார்ந்தார். 30 வினாடிகளுக்கு உள்ளே இதை தொடங்குவதற்கு சரி என சொல்லிவிட்டார்.

இளையராஜா உடன் இருக்கும் குழுவினரும் சென்னை ஐஐடியுடன் இணைவது குறித்து ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மூன்று மாதத்திற்கு முன்பு தான் பேச்சுவார்த்தை ஆரம்பித்து தற்போது மையம் திறக்கும் தருவாயில் இருக்கிறது. சங்கீதமும் தொழில்நுட்பமும் ஒன்று. சங்கீதத்தில் தொழில்நுட்பம் உள்ளது தொழில்நுட்பத்தில் சங்கீதம் உள்ளது” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com