ஜெயலலிதா மரண விசாரணையில் ஆஜராகிறார் ஐஜி பொன்.மாணிக்கவேல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் வரும் 25ஆம் தேதி ஆஜராக உள்ளார்.
இரண்டு வார கால கோடை விடுமுறைக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையம் வரும் 25ஆம் தேதி மீண்டும் விசாரணையை தொடங்க உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது, உளவுத்துறை டிஐஜியாக பொறுப்பில் இருந்த ஐஜி பொன்.மாணிக்கவேல் 25ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடம் ஏற்கனவே விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பதர் சையது 25ஆம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதே போல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ராமலிங்கம், சாந்தா ஷீலா நாயர், ஆளுநர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் ஸ்ரீனிவாசன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், தனி மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் ஆகியோர் வரும் 26ஆம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து அப்போலோ மருத்துவமனை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து ஆய்வு செய்ய 25, 26ஆம் தேதிகளில் மருத்துவக்குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.