போலி வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்தில் சிக்கித் தவித்த 19 தமிழர்களை மீட்டு தமிழ்நாடு அயலக நலத்துறை. சென்னைக்கு அழைத்து வந்தது. இவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.. 'அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து குவைத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
உணவு தங்கும் வசதி என அனைத்தும் செய்து தருவதாகக் கூறி 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து அழைத்து சென்ற சென்னையை சேர்ந்த அமோசா டிராவல்ஸ் குவைத்திலுள்ள ஃபீச்சர்ஸ் சர்வீர்ஸ் நிறுவனத்தில் மாதத்திற்கு வெறும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள், உணவிற்கும் பணம் கொடுக்கவில்லை. இதனால் இரண்டு வேளை உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கூட பணம் அனுப்பு முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தனர்.
ஓராண்டு பணி செய்து முடித்த நிலையில், மீண்டும் விசா புதுப்பித்தலுக்கு 1,25,000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். பாஸ்போர்டை திரும்பக் கேட்டதற்கு 60,000 ரூபாய் கேட்டுள்ளனர். தங்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்து, உணவின்றி தவித்த நிலையில், இந்திய தூதரகத்திலும், தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திற்கும் புகாரளித்தனர். தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இவர்களை மீட்டுள்ளோம்.
நம் இளைஞர்கள் தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறையில் முறையாக பதிவு செய்து வெளிநாடு செல்லவும். தகவல்களை விசாரிக்காமல் சென்று இது போன்ற இடங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். போலி வாக்குறுதிகள் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த இடைத்தரகர்கள் 2 பேர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரேனும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இளைஞர்களுக்கு ஏற்பட்டது போன்று வேறு யாருக்கும் நடைபெறக் கூடாது' என்றார்.