‘திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

‘திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
‘திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகரம் கொலை நகரமாகும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சி.பா. ஆதித்தனாரின் 41வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் பட்டி தொட்டியிலும் பரவ மகத்தான பணியை செய்தவர் சி.பா.ஆதித்தனார், அவர் மறைந்தாலும் அவர் பணி தொடர்ந்து வருகிறது என தெரிவித்தார்.



ராஜ்ய சபா உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கபட வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுபடுவேன், திமுக போல சர்வாதிகார ஆட்சி, சர்வாதிகார தலைவர் அதிமுகவில் இல்லை என்றார். ஊடகங்கள் மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக தாக்குதலே வழக்கு பதிவு என்ற அவர், கருத்து சுதந்திரம் குறித்து எதிர்கட்சியாக இருந்த போது வாய் கிழிய மு.க.ஸ்டாலின் பேசினார், இப்போது எங்கே போனது கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பினார். மேலும், ஜூனியர் விகடன் மீது மட்டுமல்ல இனி யார் மீது வேண்டுமானலும் வழக்கு தொடரப்படும் இது அனைவருக்குமான அச்சுறுத்தல் என்றார். தமிழக அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற ஜனநாயக விரோத ஆட்சி தற்போது நடந்து வருகிறது, இது காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தமிழகத்தை தலை குனிய வைக்கும் செயல் என தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், "பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின் பல மாநிலங்கள் குறைத்துள்ளது,
வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக அரசு ஏன் குறைக்கவில்லை. இந்த  ஆட்சிக்கோ, அமைச்சருக்கோ சுயபுத்தி இல்லையா? திமுகவின் தோழமை கட்சி ஆட்சி நடக்கும் கேரள அரசு கூட பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருக்கிறது, வாய் கிழிய பேசும் நீங்கள் ஏன் குறைக்கவில்லை. சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது.இது தலைநகரா? கொலை நகரா? எனும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com