‘206 பேரும் அர்ச்சகர் ஆனால்தான் எங்களுக்கு முழு வெற்றி’

‘206 பேரும் அர்ச்சகர் ஆனால்தான் எங்களுக்கு முழு வெற்றி’

‘206 பேரும் அர்ச்சகர் ஆனால்தான் எங்களுக்கு முழு வெற்றி’
Published on

திமுக அரசு  2006 ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்கும் அரசாணையை வெளியிட்டது. அதன் பிறகு, மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ கோயில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் சென்னை, திருச்சியில் வைணவக் கோயில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் துவக்கப்பட்டது. இங்கு படித்து முடித்த 206 பேருக்கு மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன.

இதனிடையே, திமுக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார் சங்கம் நீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், “உச்ச நீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். ஆனால்,  கோயிலின் ஆகமவிதிகளைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இருப்பினும், படித்து முடித்தவர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனிடையே, கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டனர். அப்போது, தமிழகத்தில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்து, தீட்சை பெற்றவர்கள் தங்களையும் தமிழக அரசு இதுபோல பணியில் அமர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுரையில் உள்ள கோயிலில் 206 பேரில் ஒருவர் மட்டும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராமணர் அல்லாத ஒருவர், தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. கடந்த 5 மாதங்களாக அவர் அர்ச்சகர் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நியமனம் தொடர்பாக, பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கத்தின் தலைவரான ரெங்கநாதன் கூறுகையில், “முதலில் கோயில் சார்பாக அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ஒரு வருடம் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சாதி பிரச்னையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. நேர்முகத் தேர்விற்கு பிராமணர்கள் 4, பிராமணரல்லாதோர் 2 பேரும் சென்றனர். அவர்களுக்கு அர்ச்சனைக்கான செய்முறை பரிசோதனையும் செய்யப்பட்டது. பின்னர் 6 மாதங்களுக்குப் பின்னர் ஒருவருக்கு மட்டும் நியமன ஆனை வழங்கப்பட்டது. ஐயப்பன் கோயில் என்பதால் ஆகமம் ஒரு பிரச்னை இல்லை” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “பயிற்சி முடித்த 206 பேருக்கும் பணி நியமனம் கிடைத்தால் தான் எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும். ஒருவருக்கு மட்டும் பணி நியமனம் கிடைத்தது ஒரு தொடக்கம் என்ற அளவில் மட்டும் வரவேற்கிறோம். கணக்கில் வராத எதோ ஒரு கோயிலில் நியமனம் செய்யக் கூடாது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் போன்ற முக்கியமான பெரிய கோயில்களில் நியமனம் செய்ய வேண்டும்” என்றார் ரெங்கநாதன்.

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ரெங்கநாதன் கூறுகையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா என்பது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இல்லை. குழப்பமான நிலையில் தீர்ப்பு உள்ளது. கோயிலின் ஆகம விதிப்படி இருக்க வேண்டும் என்று கூறியது. ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான ஆகம விதி இருக்கிறது. அந்தக் கோயிலின் ஆகமத்தை மீறிவிட்டதாக கூறி அர்ச்சகத்தின் நியமனத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும், “மூடப்பட்ட பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும், 206 பேரும் அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும், 10 வருடங்களாக காத்திருக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளையும் ரெங்கநாதன் முன் வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com