இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டு சாப்பிட்ட போது, இட்லி அடைத்து இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்கள் தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பல்வேறு வித்தியாசமான போட்டிகளும் நடத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிகுடி கிழக்கு கிராமத்தில், ஊர் சார்பாக பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இட்லி சாப்பிடும் போட்டியும் ஒன்று. குறிப்பிட்ட நேரத்தில் அதிக இட்லி சாப்பிட்டவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். இதுவே போட்டியின் விதிமுறை ஆகும்.
இந்தப் போட்டியில் சமையல் கூலித் தொழிலாளியான சின்னத்தம்பி என்பவரும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார். விரைவாக இட்லியை சாப்பிட்டால்தான் முதல் பரிசு கிடைக்கும் என்கிற எண்ணத்தில் சின்னத்தம்பி அவசர அவசரமாக இட்லி சாப்பிட்டிருக்கிறார். அப்போது சின்னத்தம்பியின் தொண்டையில் இட்லி அடைத்துக் கொண்டு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. சின்னத்தம்பி எவ்வளவோ முயற்சித்தும் அவரால் இட்லியை முழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. போட்டியில் சின்னத்தம்பி படும் துன்பத்தை பார்த்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்திருக்கின்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சின்னத்தம்பி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சின்னத்தம்பியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சந்தோசமாக கொண்டாடிய விழா, விபரீதத்தில் முடிந்ததால் அக்கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.