
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மாநாடு நடத்தப்படுவதற்கு என்றே கட்டப்பட்டது. இந்த மாளிகையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித்தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன
மாநாட்டின் இரண்டாம் நாளான 6ஆம் தேதி, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
கடைசி நாளான 7ஆம் தேதி, ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநாடு நடைபெற உள்ளது. மேலும் மாநாட்டின் முடிவில் சிறந்த கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.