வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நீதிமன்றத்தில் இளையராஜா அறிவிப்பு

வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நீதிமன்றத்தில் இளையராஜா அறிவிப்பு
வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நீதிமன்றத்தில் இளையராஜா அறிவிப்பு

பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ளதாகவும் இளையராஜா விளக்கம் அளிக்கப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976ஆம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதனிடையே, பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தானே எழுதிய இசை கோர்ப்புகள், தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 40 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இடத்தில் இளையராஜாவை ஒரு நாள் அனுமதிக்க முடியுமா என பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது என்றும், அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச்செலலாம் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள், இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என யோசனை தெரிவித்ததுடன், இதுகுறித்து இரு தரப்பும் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவிற்கு அறிவுறித்தி இருந்தார்.

இதனையடுத்து,, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய அனுமதிக்க தயார் என ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; ஸ்டுடியோவில் இசையமைத்த நிலத்தை உரிமை கோர கூடாது; ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர், வழக்கறிஞர் ஆகியோருடன் மட்டுமே இளையராஜாவை அனுமதிக்க முடியும் என நிபந்தனைகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஸ்டுடியோவுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததோடு, இளையராஜா வந்து செல்லும் நாள் குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தனது பெயரில் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் பிரமான மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com