பேசுறதெல்லாமே பொய்தான்..ஐபிஎஸ் போஸ்டிங் எப்படி கொடுத்தாங்க? - ஆர்.எஸ்.பாரதி

பேசுறதெல்லாமே பொய்தான்..ஐபிஎஸ் போஸ்டிங் எப்படி கொடுத்தாங்க? - ஆர்.எஸ்.பாரதி
பேசுறதெல்லாமே பொய்தான்..ஐபிஎஸ் போஸ்டிங் எப்படி கொடுத்தாங்க? - ஆர்.எஸ்.பாரதி

திமுக ஆட்சி மீது கை வைத்தால் பாஜகவினர் தமிழகத்தில் இருக்கவே மாட்டார்கள் என பேசியுள்ள திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதவியில் இருந்த போது செய்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சீண்டி பார்க்கிறார், சனாதனம் பற்றி பேசுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆன்லைன் தடைசட்டத்தினை எதிர்க்கிறது, ஆகையால் தான் ஆளுநருக்கு வாய் இருக்கிறது, காது கேட்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காது, வாய் முக்கியமில்லை இதயம் தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இதயம் அனுமதிக்கிறதா?. ஒருவேளை ஆளுநருக்கு இதயத்திற்கு பதில் களிமண் இருக்கிறாதா? என்று கேள்வி எழுப்பிய அவர், பலர் ஆன் லைன் ரம்மியால் பணத்தினை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அதனை தடுக்க சட்டம் இயற்றினால் அனுமதி தர ஆளுநர் மறுக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.



இதையெல்லாம் எடுத்து சொன்னால் திமுகவை மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர். அண்ணாமலை வாயை திறந்து பேசுவதெல்லாம் பொய்யாகவே இருக்கிறது. அவருக்கேல்லாம் யார் ஐபிஎஸ் போஸ்டிங் கொடுத்ததுனு தேடுறன். பாஜக தமிழக அரசியலை வேறு விதமாக நடத்த பார்க்கிறது. திமுக ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். திமுக ஆட்சி மீது கை வைத்தால் பாஜக வினர் தமிழகத்தில் இருக்கவே மாட்டார்கள், நான் சொல்லவில்லை, மக்கள் சொல்கின்றனர். மோடி யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் கதை முடிந்து விடும், சசிகலா, ஓ.பி.எஸ் தலையில் கை வைத்தார். இருவர் கதை முடிந்து விட்டது. நல்லவேளை எடப்பாடி பழனிச்சாமி தப்பித்து விட்டார்.

ஏப்ரல் 14ந்தேதி தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணமாலை கூறுகிறார். அதற்கு மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன், அவர் காவல்துறை பதவியில் இருந்த போது புரிந்த ஊழல் பட்டியலை வெயிடுவேன் என்று பேசியுள்ளார் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com