மனைவி இறந்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு: ஒரே இரவில் மூவர் உயிரிழப்பு..!
மனைவி இறந்த சோகத்தில் மகன்களுக்கு உணவில் விஷம் கொடுத்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகிலுள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்(42). இவரது மனைவி இந்துமதி சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் இருந்து உயிரிழந்தார். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த சுந்தர், துக்கம் தாளாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது மகன்களான சுனில்13) மற்றும் விமல்(9) ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை வீட்டில் தந்தையும் இரண்டு மகன்களும் இறந்து கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே இரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.