“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்
கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார் கொடுக்க வந்ததால் காவல் நிலையம் முன்பு கணவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(20). இவரது கணவர் ஆரோக்கியராஜ். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆகியுள்ளது. இதையடுத்து கணவர் ஆரோக்கியராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி ஐஸ்வர்யாவை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஐஸ்வர்யா வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கணவர் ஆரோக்கியராஜ், ‘என் மீதே புகார் அளிக்கிறாயா? புகார் அளித்தால் நான் செத்து விடுவேன்’ எனக்கூறி திடீரென பிளேடால் கையில் நான்கு இடங்களில் அறுத்துக் கொண்டார்.
உடனடியாக போலீசார் அவரிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்ததோடு அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.