காணாமல்போன 16 வயது மனைவி : புகார் அளித்து போலீஸிடம் சிக்கிய கணவர்
கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது நிஷார் என்பவர் கடந்தாண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரது பக்கத்து வீட்டில் மணப்பாறையைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த 16வயது சிறுமிக்கு ரஞ்சித்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து தனது மனைவி காணவில்லை என்றும், அவருக்கு வயது 20 என்றும் முகமது நிஷார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காணாமல்போன பெண்ணிற்கு வயது 16 என்பதும், ரஞ்சித்குமாருடன் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சிக்கு சென்றதும் தெரியவந்தது. திருச்சியில் சிறுமியை மீட்ட போலீசார் ரஞ்சித்குமாரை போக்ஸோ, கடத்தல் ஆகிய பிரிவின் கீழ் கைது செய்தனர்.
மேலும், சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த முகமது நிஷார், திருமணம் நடத்தி வைத்த முகமது நிஷாரின் பெற்றோர் அப்துல் சலாம் - பர்சானா ஆகியோரை போக்ஸோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.