பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சென்னையில் மனித சங்கிலி போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சென்னையில் மனித சங்கிலி போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சென்னையில் மனித சங்கிலி போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.

இதனிடையே பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு காணொலி காட்சி மூலம் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முறையீடு செய்தது. ஆனால் முதல் கட்டமாக 4 நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் விருந்தினர் மாளிகை அருகே அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், சென்னையிலும் போராட்டம் நீடித்து வருகிறது.

முன்னதாக, மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மனித சங்கிலி போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதிக்கு மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com