வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?- மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள்

வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?- மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?- மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, கன்னியாகுமரி இடைத்தேர்தலை சேர்த்து 76 மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்னென்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தயார் நிலையில் இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியுடன் மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் கட்ட நடவடிக்கையாக, 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

காலை 8.30 மணிக்கு, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டு, அதில் தனித்தனி அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கும். 714 மேஜைகளில், ஒரு கட்சிக்கு தலா ஒரு முகவர் மற்றும் தலைமை முகவர் என, ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் இருப்பார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட சீல், சரியாக இருக்கிறதா என்பது முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு சுற்றின் போதும் உறுதி செய்யப்படும். தொகுதி, வாக்குச்சாவடி, வார்டு வாரியாக பதிவான வாக்குகள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் எண்ணப்படும். வாக்குப்பதிவு தினத்தன்று பதிவான வாக்குகளும் , எண்ணிக்கை தினத்தன்று எண்ணப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

குறைந்தபட்சமாக 15 சுற்றுகளும் அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரையும் நடைபெற வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், முடிவுகள் வெளியிடும் முன்பாக, அரசியல் கட்சி முகவர்களின் கையொப்பம் பெறப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலுள்ள அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் அதிகாரபூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும். பிற்பகலுக்குள்ளாக முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார்?, வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார். அந்த சான்றிதழை வேட்பாளர் அல்லது அவரது தலைமை முகவர் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com