பெட்ரோல் ரூ.1 உயர்ந்தால்.. உங்கள் மாத பட்ஜெட்டில் எவ்வளவு கூடுதல் செலவாகும் தெரியுமா?
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்ந்தால், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் ரூபாய் 7.50 காசுகள் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
தற்போது 5வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.01க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சிஎன்ஜி விலையும் சென்னையில் கிலோவுக்கு 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் எரிபொருள் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தத் தொடர் விலை உயர்வு பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்ந்தால், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும். வாகனங்களுக்கு நேரடியாக 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை மட்டுமே செலவு கூடினாலும், மறைமுகத் தாக்கமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எரிபொருள் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்துச் செலவு உடனடியாக அதிகரித்து, வெளிமாநிலங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து லாரிகள் மூலம் வரும் காய்கறிகள், பால், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்கிறது.
இதனால் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 150 ரூபாய் வரை கூடுதலாகச் செலவாகலாம். மேலும் ஆட்டோ, கால் டாக்சி, பள்ளி வாகனக் கட்டணங்கள் மற்றும் ஆன்லைன் டெலிவரி கட்டணங்களும் உயர்வதால், ஒட்டுமொத்தமாக மாத பட்ஜெட்டில் 500 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும்.

