“சிறிது நேரத்தில் மறையும் சிறப்பு மை”- அதிர வைக்கும் குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி?

“சிறிது நேரத்தில் மறையும் சிறப்பு மை”- அதிர வைக்கும் குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி?
“சிறிது நேரத்தில் மறையும் சிறப்பு மை”- அதிர வைக்கும் குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி?

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாகி 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகியுள்ளதாக செய்தி வெளியானது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட டிஎன்பிஎஸ்சி 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது.

முறைகேடு நடந்தது எப்படி?

ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள், இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர். அதன்பின் இடைத்தரர்களிடம் இருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை பயன்படுத்தி, இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் தேர்வர்கள் விடைத்தாளில் குறித்துள்ளனர்.

இதன்பின் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன், 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளனர். இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்ப்டடுள்ளது. மேற்கூறிய மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி உறுதி செய்துள்ளது.

இதன்காரணமாக கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

1. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. .

2. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி

3. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு

4. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com