மழையால் இடிந்த மண் குடிசை : முதியவர் உயிரிழப்பு
நாங்குநேரியில் மழையால் மண் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் மழையால் மண் குடிசையின் சுவர் இடிந்து முதியவர் உயிரிழந்துள்ளார்.
நாங்குநேரி அருகே உள்ள குசவன் குளத்தை சேர்ந்த முதியவர் கந்தசாமி (81). இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான மண் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெய்த மழையினால் வீட்டின் மண் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இன்று காலை அக்கம்பக்கத்தினர் வீடு இடிந்து இருப்பதை கண்டு இடிபாடுகளை அகற்றினர். அப்போது இடிபாடுகளுக்குள் கந்தசாமி சிக்கியிருப்பதை கண்டு மீட்டனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீசார் அவரது உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று திருத்தணியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால், கே.கே.நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தாய் கோகிலா (33) மற்றும் மகன் அக்பர் (15) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.