பூந்தமல்லி அருகே திறந்திருந்த வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகையை திருடிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னி. இவரது கணவர் ரவி வெளியே சென்றிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த பொன்னி கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதையடுத்து, சிறிந்து நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ரவி பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பீரோவிற்கு அருகிலேயே அதன் சாவியும் இருந்ததால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக இருந்துள்ளது தெரியவந்தது.
இதேபோல், மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், முத்துமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த்(28), கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் தாய் வீட்டிலிருக்கும் அவரது மனைவியும், குழந்தையும் பார்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்றார்.
இதையடுத்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசில் விசாரணை செய்து வருகின்றனர்.