ஓசூர் | கழுதையின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்... மாந்திரீகமா? - போலீசார் விசாரணை!
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (43). சலவை தொழில் செய்து வரும் இவர், கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கொட்டகை அமைத்து அதில் 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார். இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல ஆனந்த், ஏரிக்கரையில் உள்ள தனது கொட்டகைக்குச் சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்து வெட்டப்பட்டு உயிரிழந்து இருந்த நிலையில், அதன் தலையை மர்ம நபர் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த், இதுகுறித்து ஓசூர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனரா என்ற சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.