நோன்பு திறப்பது இஸ்லாமியர்கள் ; கஞ்சி வழங்குபவர் இந்துக்கள்
ரமலான் காலத்தின்போது நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கடந்த 35 ஆண்டுகளாக இந்துக்கள் வழங்கி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் புகழ்பெற்ற மசூதி உள்ளது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ரமலான் நோன்பு காலத்தின்போது, சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள், மாலை நேரங்களில் இந்த மசூதிக்கு வந்து தங்கள் நோன்பை முடித்துக்கொள்வர்.
நோன்பு திறக்கும் நிகழ்வு என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இங்கு என்னவோ தனித்துவமிக்கதாகவே கருதப்படுகிறது. இங்கு நோன்பு திறக்கும் இஸ்மாமியப் பெருமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, விநியோகம் செய்து வருவது இந்துக்கள் என்பதே அதற்கு காரணம். ஆம், தலையில் குல்லா அணிந்தபடி உணவுப் பொருட்களை கொண்டு வந்துள்ளவர்கள் யாரும் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக, அவர்கள் அனைவரும் இந்துக்கள். இச்சேவையினை கடந்த 35 ஆண்டுகளாக இந்துக்கள் செய்து வருகின்றனர்.
நோன்பு திறக்க இம்மசூதிக்கு வரும் இஸ்லாமிய அன்பர்களுக்கு தேவையான கஞ்சி, இறைச்சி, வாழைப்பழம், பேரீட்சை உள்ளிட்டவற்றை இந்துக்கள் குழு விநியோகம் செய்து வருகிறது. சுத்தமும், சுகாதாரமும் மிக்க முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் கொண்டு இன்முகத்துடன் இந்துக்கள் வழங்கி வருகின்றனர்.
மதத்தை கடந்தது மனிதநேயம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகவே இந்துக்களின் இந்த நெகிழ்ச்சி மிக்க சேவையை பலரும் போற்றி வருகிறார்கள்.