சூறைக்காற்றினால் தேங்கும் மணலை தடுக்க பனைமட்டைகள் - நகைக்கும் ஊர் மக்கள்
தனுஷ்கோடியில் சூறைக்காற்றினால் சாலையில் மணல் தேங்குவதைத் தடுக்க, பனைமட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதை மக்கள் வேடிக்கையாகப் பார்க்கின்றனர்.
ஆழிப்பேரலையால் உருக்குலைந்து போன தனுஷ்கோடியில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை சூறாவளிக் காற்று வீசுவது வழக்கம். இதனால் கடற்கரையில் உள்ள மணற்குன்றுகள் கலைந்து சாலைகளில் மணல் குவிகிறது. இதைத் தடுக்க 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு 5 அடி உயர தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
எனினும், சாலைகளில் மணல் தேங்குகிறது. அடுத்தக்கட்ட முயற்சியாக, தனுஷ்கோடியில் நெடுஞ்சாலைத்துறையினர் பனைமட்டைகளால் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இது பயனற்றது என்றும், ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துமாறும் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் மாரியப்பனிடம் கேட்டபோது, பனைமட்டை தடுப்புகள் மூலம் செயற்கையாக மணல் குன்றுகளை உருவாக்கும் இந்த யோசனை 'கூகுளில்' தேடியபோது கிடைத்ததாகக் கூறினார். ஆனால் இதனை பலரும் நகைத்து வருகின்றனர்.