நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
Published on

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், மாணவிகளை தவறாக வழிநடத்தினார் என நிர்மலா தேவி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் யாருக்காக அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. உயரதிகாரிக்காக நிர்மலாதேவி செயல்பட்டார் எனக் கூறும் காவல்துறை, பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித் துறை செயலர், அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் பட்டியலுக்குள் வரும் நிலையில், அவர் குறித்து கூறவோ, விசாரிக்கவோ இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, பெரும் கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட ஜாமின் வழங்கப்படும் நிலையில் நிர்மலா தேவிக்கு ஏன் ஜாமின் கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். ஜாமின் வழங்கப்படாமல் சிறையில் வைத்திருப்பதன் அவசியம் என்ன, நிர்மலாதேவியை ஜாமினில் வெளியே விட அச்சமா என்றும் நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். விசாரணை ஒருசார்பாக அமையக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.‌ இதுதொடர்பாக தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மார்ச் 18ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com