கோவிலின் சொத்துகள் விற்பனையில் 20 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- நீதிமன்றம் கேள்வி

கோவிலின் சொத்துகள் விற்பனையில் 20 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- நீதிமன்றம் கேள்வி
கோவிலின் சொத்துகள் விற்பனையில் 20 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- நீதிமன்றம் கேள்வி

கோவிலின் அசையா சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 20 ஆண்டுகளாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக்கோரியும் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ. ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். 2001ஆம் ஆண்டு கோவிலுக்காக வாங்கப்பட்ட நிலம் வெங்கட்ராமன் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் பரம்பரை அறங்காவலர்கள் தேர்தலை நடத்தக்கோரி ஏ.ஆர்.திருப்பதி கவுண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராதாகிருஷ்ணன் தரப்பில் பிரதான சாலையிலுள்ள கோவிலுக்கு தினமும் அதிக பக்தர்கள் வருவதால் காணிக்கைகள் அதிகளவில் வருவதாகவும், ஆனால் அவற்றை முறையாக செலவிடுவதில் அறங்காவலர்கள் இடையே நிர்வாக குழப்பம் நிலவுவதாகவும் வாதிடப்பட்டது. திருப்பதி கவுண்டர் தரப்பில் கோவிலின் அன்றாட பணிகளை முறையாக மேற்கொள்ள ஏதுவாக அறங்காவலர்கள் குழுவின் தலைவர் தேர்தலை நடத்த வேண்டுமென வாதிடப்பட்டது.

கோவில் செயல் அலுவலர் தரப்பில் கோவில் நிலம் விற்கப்பட்டது தொடர்பான பத்திரப்பதிவை ரத்துசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கோவிலின் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மொட்டை அடிப்பதற்கான இடம் ஆகிய இட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறங்காவலர்களால் குட முழுக்கு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான கூட்டத்தை டிசம்பர் 22ஆம் தேதி கூட்டவுள்ளதாக தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்துள்ள திருப்பதி கவுண்டர் கடந்த 2019ஆம் ஆண்டே அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், வழக்கு தொடர அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை என வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், இரு வழக்குகளிலும் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானவற்றிற்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் தாக்கல்செய்த அறிக்கைமூலம் தெளிவாவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் கோவிலின் அசையா சொத்துக்கள் 2001 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே கோவில் சொத்துக்களை மூன்றாம் நபர்களுக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த தகுந்த அதிகாரியை நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, கோவிலின் முந்தைய கால வரவு செலவுகளையும் ஆய்வுசெய்து, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com