சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் கருத்துகளும்...

சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் கருத்துகளும்...

சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் கருத்துகளும்...
Published on

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தாமாகவே முன் வந்து விசாரிக்க தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம். இதனையடுத்து இன்று சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதையடுத்து காவல்துறை ஆய்வாளரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை முன்வைத்தனர். பேனர் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என நீதிபதிகள் விமர்சித்தனர். ஏதாவது நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். உயிர்பலி கொடுத்தால்தான் நிர்வாகம் செயல்படுமா? அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர். 

காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட இல்லை. ஏன் எழுதவில்லை?  என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காவல் ஆய்வாளர், விபத்து நடந்த பகுதியில் 4 பேனர்கள் இருந்தன. குறிப்பேட்டில் எழுத மறந்து விட்டேன் எனத் தெரிவித்தார். 

பிற்பகல் 2.30 மணிக்கு நடந்த விபத்து குறித்து மாலை 6 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் 18 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஆய்வாளர் ஒரு பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் அனுமதி பெறாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? எனவும் கேள்வி எழுப்பினர். 

பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை விட்ட அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது. சாலைகளில் உள்ள சிசிடிவி மூலம் இதுப்போன்ற விதிமீறல்களை கண்டறிய முடியுமா? யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என உணர்ந்தாலே தவறுகள் குறைந்துவிடும். நீதிமன்ற உத்தரவுகளை பற்றி அதிகாரிகளுக்கு தெரியும். அதன் தீவிரம் பற்றி அமைச்சர்களுக்கு தெரியுமா?

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஒட்டினால் சிசிடிவியை பார்த்து பிடிக்கலாம். ஆனால் இது ஒரே இரவில் வைக்கும் பேனர்கள் கிடையாது என்பது அதிகாரிகளுக்கு தெரியுமல்லவா? நீங்கள் எழுதும் கடிதங்கள் உங்கள் வசமே வைத்துக்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எவ்வளவு இடைக்கால நிவாரானம் கொடுக்க போகிறீர்கள்? அதை கொடுத்துட்டு தவறிழைத்த அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யுங்கள். மேலும் பேனர் வைத்தவரிடமும் வசூலிக்க வேண்டும். 

துறைரீதியான நடவடிக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடமையை செய்யத் தவறியுள்ளனர். தலைமை செயலாளரோ, நகராட்சி நிர்வாக செயலாளரோ பதில் மனுக்களில் சொன்னது போல செயல்படவில்லை. உத்தரவாதம் அளித்த படி நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பலியாகி இருக்காது. 

பணியில் கவனக்குறைவு, அலட்சியத்திற்காக ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும்
 எனவும் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com