சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச்சென்ற சம்பவத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான நோட்டீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்காவை எடுத்துச்சென்றது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் உரிமை மீறல் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை 2017 பிப்ரவரி 18ம் தேதியே தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முடிவெடுக்காத நிலையில் தற்போதும் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு என திமுக எம்.எல்.ஏ.-க்கள் தரப்புவாதிட்டது.

அதற்கு தடை செய்யப்பட்ட பொருளை வாங்கி, சபையில் காட்டியது உரிமை மீறலா இல்லையா என்பதை தான் பார்க்க வேண்டும் எனவும் சபையின் கண்ணியத்தை காக்கவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் உரிமைக்குழு தரப்பு பதில் தெரிவித்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

மேலும், 2017 பிப்ரவரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கவும், ஆளுநரின் செயலாளர் தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரி 2017ல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி அமர்வு அறிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com