சிறையிலுள்ள பேரறிவாளனை வாரம் ஒருமுறை சந்திக்கலாம் - அற்புதம்மாளுக்கு அனுமதி
சிறையில் உள்ள பேரறிவாளனை ஜனவரி 19 ஆம் தேதி வரை வாரம் ஒருமுறை சந்திக்க அவரது தயார் அற்புதம்மாளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பரோலில் வந்த பேரறிவாளன் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 19 ஆம் தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க தயார் அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழை சமர்பிக்க அற்புதம்மாளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. பேரறிவாளனின் உறவினர்கள், நண்பர்களை காணொலியில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.