பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு நடைபெறும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையிலும், தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த இம்மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்,கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது கல்வி வழங்குவது மட்டுமே இல்லை என்றும், ஆரோக்கியம், சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பான கட்டடம், போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை ஆகியவையும் அதில் அடங்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து வரும் 22-ம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.