சங்ககால சான்றுகளை கொண்ட பாடியூர் மண்மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "பழனி அருகே உள்ள பாடியூர் பகுதியில் ஒரு பழமையான மணல் திட்டு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள், கடந்த 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தோம். அப்பொழுது இங்கு மண் பாண்டங்கள், சுடுமண் பொம்மைகள், முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள் உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
3 முதல் 4 ஏக்கர் வரை உள்ள இந்த மணல் மேட்டையை தகர்த்து அரசு மேல்நிலைப் பள்ளி அங்கு கட்டப்பட்டுத்துள்ளது. இதன் பாரம்பரியம் கருதாமல் அரசு அதிகாரிகள் பழமையான இடத்தை தகர்த்து, கட்டடம் காட்டியுள்ளது வேதனைக்குரியது. தற்போது 1 ஏக்கர் மண் மேடு மட்டும் எஞ்சி உள்ளது. இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மிக பழமையானவை, சங்ககாலத்தை சேர்ந்தவை. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்ட பொருட்களுக்கு ஒப்பானவை. எனவே திண்டுக்கல் அருகே உள்ள பாடியூரில் உள்ள இந்த மண் மேட்டை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்று சான்றுகள், ஆதாரங்கள் கிடைக்கும். எனவே இந்தப் பகுதியில் மத்திய,மாநில அரசுகளுக்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தீரேஷ், சதீஷ்குமார் அமர்வு, இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மாநில தொல்லியல் துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்திரவிட்டனர்.