வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. அதன் தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் போது முறையாக தெரிவிக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர். அதேபோல இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர். இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புகார் அளித்தால், வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆகவே, மாசுக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

