\
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற உத்தரவு

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற உத்தரவு

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற உத்தரவு
Published on

ஸ்டான்லி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவில், வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரைச் சேர்ந்த 21 வயதான பிரவீன் மார்ச் 20-ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த புகாரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிரவீன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் கோரி பிரவீன் தாக்கல்செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், பைக் ரேஸில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொனியில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

பின்னர், மனுராரர் பிரவீன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் எனவும், அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்த நீதிபதி, பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com