சிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு

சிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு

சிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு
Published on

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து ஒரு வாரக் காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் மேலும் ஒரு வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மூன்றாவது முறையாக அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல என்றும், இதுபோன்ற செயல் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் எனவும் கூறினர். 

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புதிதாக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதை கூட நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நியமிக்கப்பட்ட 104 காவலர்களில் 26 பேர் பணியில் சேர்ந்துள்ளதாகவும், பத்து பேர் மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதனைக் கேட்ட நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கெடு விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர். இதே போன்று சிலைகளை பதுக்கி வைத்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிரண்ராவ் மும்பை செல்ல அனுமதித்த நீதிபதிகள், உரிய நேரத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் சீல் வைக்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com