69 ரூபாய் கையாடல் செய்த நடத்துநர்: பணி நீக்கத்தை உறுதி செய்த உயர்நீதிமன்றம்
பயணிகளிடம் வசூலித்த கட்டணத் தொகையில் 69 ரூபாயை கையாடல் செய்ததாக நடத்துநரை பணி நீக்கம் செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டில் நடத்துநராக பணியில் சேர்ந்தவர் மணிமாறன். இவர், அருளாளம் - தேன்கனிக்கோட்டை வழித்தட பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மணிமாறன் நடத்துநராக இருந்த பேருந்தில், ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஏற்கெனவே விற்கப்பட்ட டிக்கெட்களை 40 பயணிகளிடம் 2 ரூபாய் 20 காசுகளுக்கு விற்றதுடன், வசூல் செய்த தொகையில் 68 ரூபாய் 95 காசுவை கையாடல் செய்ததாகவும் நடத்துநர் மணிமாறன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
விசாரணைக்கு பிறகு மணிமாறனை பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்தது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவை எதிர்த்து மணிமாறன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்தவும், பணி நீக்க காலத்திற்கான ஊதியத்தில், 25 சதவீத தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், மணிமாறன் பணியிலிருந்த 2 ஆண்டுகளில் 4 முறை தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம், மீண்டும் பணி வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.