புதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..!
புதுச்சேரி மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக டிஜிபி சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு மே மாதம் தலைக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியது. எனினும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதனை அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில் மீண்டும் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக டிஜிபி அறிவித்துள்ளார்.
இதனை மீறினால் முதல்முறையாக பிடிபடுவோரிடம் 100 ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். மூன்றாவது முறை சிக்கினால் 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார். இதேபோல் காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் புதுச்சேரி டிஜிபி தெரிவித்தார்.