கோவையின் அழகை ஹெலிகாப்டரில் சென்று ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா வசதியை தனியார் அமைப்பு ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
கோவையிலுள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, கோவையின் அழகை ரசிக்கவும், சுற்றுலா செல்வதற்கும் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ‘ஹெலி கார்னிவெல்’ என்ற நிகழ்ச்சியை வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏற்பாடு செய்துள்ளனர். கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இதனை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் துவங்க உள்ள இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியில் கோவையின் “ஏரியல் வியூ”வை கண்டு ரசிக்க முடியும்.
இதில் கோவையின் 20 கி.மீ. சுற்றளவிலுள்ள மருதமலை, ஈஷா, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பிள் என கோவை மாநகரத்தின் ரம்மியமான அழகை 10 நிமிடம் வரை கண்டு களிக்கலாம். இந்த ஹெலி கார்னிவல் நிகழ்ச்சிக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 3,999.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.
மேலும் தமிழக அரசு அனுமதியுடன் கோவையில் இருந்து ஊட்டி சென்று வர இந்த ஹெலி கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. கோவையில் இருந்து ஊட்டி சென்று வர 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். கூடிய விரைவில் முதல்வருடன் பேசி தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அமைப்பினர் உறுதி அளித்துள்ளார்.
கோவை ஹெலி கார்னிவல் சுற்றுலா முன்பதிவிற்கு 0422 4500600, 9600977711 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.