முடிச்சூரில் தேங்கும் மழை நீருக்கு கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம்: பொதுமக்கள் புகார்
2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை முடிச்சூர் பகுதியில், மழைநீர் வடிவதற்கு தற்போது வரை எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை முடிச்சூர் பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் முடிவடையாததால், ஒருநாள் மழைக்கே தற்போதும் தண்ணீர் தேங்கியுள்ளதாக அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் மழைநீர் தேங்குவதால், முடிச்சூர் பகுதியில் சொந்த வீடுகள் வைத்திருப்போர் பலர் வாடகை வீடுகளில் வசிக்கும் அவலம் நீடிப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
தரைத்தளத்தில் தங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். முடிச்சூர் பகுதியில் மழைநீர் தேங்க, கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே காரணம் என புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முடிச்சூர் பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வர்தா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

