உளுந்தூர்பேட்டை பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை – வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள்!
செய்தியாளர்: ஆறுமுகம்
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்; நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதில், மடப்பட்டு, பிள்ளையார்குப்பம், சேந்தநாடு, எறையூர், குன்னத்தூர், கெடிலம், செம்பியம்மன்தேவி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களின் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த மழையால் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக 10.6 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.