சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை.. குளிர்ச்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.!
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதையே குறைத்து வருகின்றனர். இந்த சூழலில் தான், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று மழை பெய்தது. குறிப்பாக, தேனி மாவட்டம் பனபுரம் பகுதியில் 9 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதுடன், குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையின், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையார் உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்தது. அதேபோல, புறநகர் பகுதிகளான ஆவடி, அம்த்தூர் ஆகிய இடங்களிலும் இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்திருக்கிறது. ஏப்ரல் மாத வெயிலில் தமிழகம் தகித்து வரும் நிலையில், திடீர் மழை வெப்பத்தை தணித்திருப்பதன் மூலம், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

