நீலகிரியில் இன்று கனமழை.. 10 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு..
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்.12) கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியிலும், 13ஆம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனியில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.