சென்னையில் மழை தொடருமா? - வானிலை நிலவரம்

சென்னையில் மழை தொடருமா? - வானிலை நிலவரம்
சென்னையில் மழை தொடருமா? - வானிலை நிலவரம்

சென்னையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வரும் நிலையில், இதேநிலை இன்று மாலை வரும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. வேளச்சேரி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவுகிறது. 
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நெற்பயிர் அறுவடைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில், இந்த மழை போதுமானதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆற்று ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பள்ளிகள் மற்றும் தனியார் மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மற்றும் தேவாரம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலையில் குத்திரபாஞ்சான் அருவி, அனுமன் நதி ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் என பல பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும், கோவை, திண்டுக்கல் என பெரும்பாலான மாவட்டங்களிலும் மழை பெய்தது.

இந்நிலையில் மழை தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பெய்து வரும் கனமழை கேரளாவில் தொடரும் என்றும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் குறிப்பிட்ட இடங்களில் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மிதமான மழை பெய்துள்ளதாக கூறியுள்ள அவர், இன்று மாலை வரை சென்னையில் தூரல் நிலை காணப்படும் என்று கூறியுள்ளார். சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com