'ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை; மற்றவர்களுக்கும் புரியவில்லை' - வைகோ

'ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை; மற்றவர்களுக்கும் புரியவில்லை' - வைகோ

'ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை; மற்றவர்களுக்கும் புரியவில்லை' - வைகோ
Published on

'ஆளுநர் உடனான சநதிப்பு குறித்து ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை; மற்றவர்களுக்கும் புரியவில்லை' என விமர்சித்துள்ளார் வைகோ.

கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் மதிமுக கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில், கலந்து கொண்ட பேசிய வைகோ, அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ''மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக தான் இடையிலே கொரோனா காலத்தில் நான் சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தாலும், தற்போது இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தொடங்குகிறேன். இது மதிமுகவின் ஜிப்ராண்டல் கோட்டை. இந்த கொங்கு மண்டலத்தில் தற்பொழுது ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனவும் தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை சென்னையில்  மிகச் சிறப்பாக நடத்த உள்ளோம். பொருளாதார பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் உள்ளது” என தெரிவித்தார்.

மதிமுக திமுகவோடு, லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டு, சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கும், ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதற்கும் ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம் என்று சொல்லக்கூடிய ஏகாதிபத்திய பாசிச கட்சிகளை வீழ்த்துவதற்க்கும் அண்ணாவின் வழியில் செயல்படுகிறோம். கலைஞர் எவ்வாறு கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ அது போலவே திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள திட்டங்கள் போல் எங்கும் அறிமுகப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியான ஆட்சி. திராவிட இயக்க லட்சிய ரீதியான ஆட்சி என்ற முறையில் அவர்கள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “அதனால் மிகப்பெரிய பாதிப்பிற்கு மக்கள் ஆளாகி இருப்பதாகவும் ஜிஎஸ்டி-யினால் பொதுமக்கள் மிதிக்கப்படுகிறார்களே தவிர அதானியோ அம்பானியோ அல்ல. பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்து பொருட்களும் விலை உயர்கிறது. மோடி அரசின் மீது மக்களுக்கு நாள்தோறும் வெறுப்பு அதிகரித்து வருகிறது” என்றார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு அனைவரது இல்லங்களிலும் கொடியேற்றுவது குறித்து கருத்து கேட்டதற்கு தேசிய கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான் எனவும் அது வரவேற்கத்தக்கது தான் எனவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்தது குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லுகிறார்; மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லிவிட்டேன் எனக் கூறுகிறார். பின்பு அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் எனவே அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: அதிமுகவின் முதல் எம்.பி கே. மாயத்தேவர் காலமானார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com