‘ஆசிரமத்திற்கு சென்ற மகனை காணவில்லை’ என தாய் வழக்கு: நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ்
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்க கோரி தாய் அங்கமாள் ஆட்கொணர்வு மனு மீது வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டுவரும் நித்யானந்தா, சமூக வலைதளங்களில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். வழக்கு ஒன்றில் அவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி, கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடு 18ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக கர்நாடகா காவல்துறையினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இதுஒருபுறம் நித்யானந்தா ஆசிரமம் தொடர்பாக புதிய புகார் ஒன்றும் எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பிடதி-யில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அவரை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க கோரி அவரது தாய் அங்கம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்காம்மாளின் வழக்கு குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறையும், நித்தியானந்தாவும் 4 வாத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.