பேறுகால விடுப்பு வழங்க மறுத்த நீதிபதிகள்... ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
கர்ப்பிணியான நீதிமன்ற பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருவாரூர் கொடவாசலில் உள்ள முன்சீப் நீதிமன்றத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் தனது பேருகாலத்திற்காக விடுப்பு வேண்டி விண்ணப்பம் செய்தார். ஆனால், இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த முன்சீப் நிதிமன்றத்தின் நீதிபதி, பெண் ஊழியர் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளதால் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என்றும் கூறி விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளார். இதனை திருவாரூர் நீதிமன்ற நீதிபதியும் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட பெண் ஊழியர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனுவில், பெண்ணின் கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்துள்ளார். அதன்பின்னர் பாரதி என்ற நபருடன் ஒன்றாக வாழ்ந்துவந்தநிலையில் ,
அவர் இப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததுள்ளார். இதனால், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், கடந்த 2024 ஆம் ஆண்டு பாரதிக்கும் இப்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
இந்த இடைப்பட்டகாலத்தில்தான் பேறுகால விடுப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார் . ஆனால், விடுமுறை தர முன்சீப் நீதிபதியும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் மறுத்துவிட்டதாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பிட்டுள்ளார் .
இந்தநிலையில்தான், இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தெரிவித்த அவர்கள் , ”கர்ப்பம் தரித்த பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்தது சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல. பேறுகால விடுப்பு வழங்க அவரது பின்புலத்தை ஆராய வேண்டிய அவசியமும் கிடையாது. அதேபோல அவர் பதிவு திருமணமும் செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. அவருக்கு பேறுகால விடுப்பு வழங்காதது மனித உரிமை மீறல் என்பதால் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத்தொகையை சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.